வெள்ளி, நவம்பர் 03, 2006

இது எங்க சாமி - அறிவுமதி

குலதெய்வம் - வீரனார்

‘வெள்ள குதிரக்காரன்
விரல் ரெண்ட தட்டி வர்றான்
வேல்கம்பு வீரனாரு
பகையறுக்க பாஞ்சு வர்றான்’
னு எங்க அத்தை ஆங்காரமாப் பாடினா, நெஞ்சுக்குள்ள நெருப்பெரியும்!

அந்தக் குரலில், ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடக்கப்பட்டு, கூலிகளா முதுகொடிஞ்சு கிடக்கிற எம்மக்களோட மொத்த கோவமும் முறுக்கேறி ஒலிக்கும். வீரனாரு இந்த மண்ணோட சொந்தக் காரன். கழுத்துல புலிநகத்தையும் மனசுல காட்டுமல்லி வாசத்தையும் சூடிக்கிட்டு அலைஞ்ச எங்க ஆதிப்பாட் டன். இப்பவும் காட்டுக்குள்ளேதான் இருக்கான். மணிமுத்தாறு கரையோரம் அழிஞ்சி மரத்தடியில் இருக்கிற அவனுக்குக் கோயிலுமில்லை, கூரையுமில்லை. கதிர்காலத்துல கூட்டம் கூட்டமா வர்ற குருவிங்க, கொத்திப் போன சோளத்தை அவன் தலையில உட்கார்ந்து சாப்பிடும். இயற்கையும் வீரமும் செழிச்சுக்கிடந்த தமிழ்க்குலத்தின் மூத்த குடிதான் இந்த வீரனாரு’’ கறுப்புச் சட்டை, வெள்ளை வேட்டி சகிதம் கம்பீரமாகப் பேசுகிறார் கவிஞர் அறிவுமதி.

விருத்தாசலம் அருகே அவரது தாய்க் கிராமமான சு.கீணனூரில் இருக் கிறார் வீரனார். மழையால் மூங்கில் காடுகள் பச்சை பூத்துக்கிடக்க, முணு முணுத்தபடி நடக்கிறது மணிமுத்தா நதி. ஊர் மக்கள் சூழ காட்டுப் பாதையில் நடக்கிறார் அறிவுமதி.


‘‘இப்பெல்லாம் ஆத்துல இடுப்பு வரைக்கும் தண்ணியைப் பாக்கறதே அதிசயமா இருக்கு. என்னோட சின்ன வயசுல கரை கட்டி சுழிச்சுக்கிட்டு ஓடும். ஆத்துல தண்ணி வரும்போது சரியா காட்டுல மல்லியோட காலமும் ஆரம்பிக்கும். அப்படியே மண் வாசமும் மல்லி வாசமுமா நிறைஞ்சு கிடக்கும் ஊர். காலை யிலயும் சாயங்காலமும், கை நிறைய மல்லிப்பூவை பறிச்சுக்கிட்டு போய் வீரனார் தலையில கொட்டு வோம். பொண்ணுங்க பாவாடை நிறைய அள்ளிக்கிட்டு வந்து கொட்டு வாங்க. அது ஒரு போட்டி மாதிரி நடக்கும். முறுக்கு மீசை முரட்டு வீரனாரை மல்லிப்பூவாலயே மொத்தமா மூடிடுவோம். எங்க செல்லப்பாட்டன் தானே அவன்!’’ சிரிக்கிறார் அறிவுமதி.

காட்டு நாரத்தை மரங்கள் சூழ, அழிஞ்சி மரத்தடியில் பாசி படர்ந்த கற்சிலை யாக உட்கார்ந்திருக்கிறார் வீரனார். பக்கத்திலேயே காட்டுக் குறத்தியும் ரசபத்திரனும். சுற்றிலும் முறைக்கின்றன வேல் கம்புகள்.


‘‘நூறு நூறு ஆண்டுகளா இயற்கையோட மடியில தான் இருக்கான் என் பாட்டன். மலர்களின் மகரந்த சேர்க்கைகளை யும், கூட்டுப்புழுக்கள் பட்டாம் பூச்சிகளாகிப் பறப்பதையும் பார்த்தபடியே உட்கார்ந்திருக்கான் இயற்கையின் பெருங் காதலன். பெரிய வீரன். வெயிலென்றும் மழை என்றும் பாராமல் வேல் கம்போடு ஒரு வெள்ளைக் குதிரையில் சுற்றிவந்து ஊரைக் காவல் காத்தவன். இந்த ஆத்தங்கரையில் தங்கியிருந்த அவனை மீறி ஊருக்குள் ஒரு ஈ காக்கையும் நுழைய முடியாதாம்.

ஒருமுறை வெள்ளைக்கார துரை ஒருவர் ஆற்றைக் கடந்து ஊருக்குள் நுழையப் பார்த்தாராம். வீரனாரைப் பார்த்தும்கூட குதிரையில் இருந்து இறங்காம ஊருக்குள் நுழைய முயல, அங்கேயே ஆத்தங்கரையில் வேல் கம்பால் அவரைக் குத்தித் தூக்கிப் போட்டுட்டாராம் வீரனார். இன்னொரு முறை ஊர் மக்களை வலுக்கட் டாயமா அடிமை வேலைக்கு இழுத்துட்டுப்போன ரசபத்திரனையும் இதே ஆத்தங்கரையில் வெச்சுக் கதையை முடிச்சாராம் வீரனார். ரசபத்திரனோட கடைசி ஆசைக்காக, அவனுக்கும் இங்கே ஒரு சிலை வெச்சாங்களாம்.
ஒரு முறை ஊருக்குள் வெள்ளம் வந்தப்போ, தனியாளா மடையடைக்க இறங்கின வீரனார், அந்த வெள்ளத்தில் மூழ்கிச் செத்துப்போனதா சொல்வாங்க. இப்படி வீரனாரைப் பற்றி ஏராள மான கதைகள் என் ஆத்தாக்களின் சுருக்குப் பைகளில் இன்னும் இருக்கு. களத்தில் இறந்துபட்ட மாவீரருக்கு நடுகல் நட்டு வழிபடுவது தமிழர் மரபு. அப்படியோர் நடுகல் நாயகன்தான் வீரனார்! இதைத் தவிர வேறு எந்த கடவுள் மரபும் எங்களுக்கு இல்லை’’ என்கிறார் அறிவுமதி.

‘‘வீரனாருக்கு தினப்படி பூசை, திருவிழா எல்லாம் இல்லை. தோதுப்பட்ட நேரத்துல யாரு வேணும்னாலும் வந்து கும்பிட்டுக்கலாம். ஊர்ல வயல்ல விளையற முதல் தானியத்தை வீரனாருக் குப் படைக்கிறது வழக்கம். அதேமாதிரி வீரனாரு கொடைக்குக் கீழே இருக்கிறவங்க அத்தனைபேரும் மொட்டை போடறது, காதுகுத்து எல்லாம் இங்கதான் வெச்சுப்பாங்க. ஆடு, கோழி, பன்னி மூணும் பலியிடறது வழக்கம். கூடவே சாராயம், சுருட்டு, கள்ளு எல்லாம் உண்டு. நம்மளை மாதிரியே மூக்கு முட்ட கவுச்சி சாப்பிடற ஆளுதான் வீரனாரு’’ என்று சிரிக்கிறார் ஒரு பெரியவர்.
‘‘என்னைப் பொறுத்தவரை வீரனார் தெய்வ மில்லை. என் மூத்த போராளி. இந்த பூசை, படையல் எல்லாமே நன்றி செலுத்துதலின் அடிப்படையில் வந்தவைதான். பிற்காலத்தில் இவற்றில் படர்ந்துவிட்ட மூடநம்பிக்கைகளில் எனக்கு உடன்பாடில்லை. ஓர் இனக்குழுவின் வீரமரபின் அடையாளமாகத்தான் வீரனாரை நான் பார்க்கிறேன்.

‘பஞ்ச மக்க பசியாற
கஞ்சியில்ல வெஞ்சனமில்ல
நஞ்சி நாம நின்னாலும்
சொந்தமா துண்டு நெலமில்ல.
அஞ்சுகமே தூங்கய்யா
இப்ப ஆத்தா மாரில் பாலில்ல...’
என்கிற என் தாய்க் கிழவிகளின் பாட்டு இன்னும் இதே காத்துல அலைஞ்சுக்கிட்டுதான் இருக்கு. என் மக்களின் வறுமையும் அடிமைத்தனமும் முழு தாகப் போகவில்லை. பண்பாட்டு தளத்திலும் கலாசார தடத்திலும் தமிழினம் தொடர்ந்து நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. இதையெல் லாம் எதிர்க்க நமக்கு வழிகாட்டும் வடிவமாகத் தான் முருகனையும், வீரனாரையும் பார்க்கிறேன். அவர்கள் கையில் இருந்த வேல்கம்புதான் இப்போது என் கையில் எழுதுகோலாக இருக்கிறது.

எங்கள் பாட்டனார்கள் எதிரிகளிடம் அரிவாளால் பேசினார்கள். இப்போது பேரன்கள் நாங்கள் பெரியார், அம்பேத்கர் தந்த அறிவால் பேசுகிறோம். எங்கள் தொன்மத்தின் வேர்தான் வீரனார். அதிலிருந்து முளைத்துக் கிளை பரப்பி, இன்று உலகம் முழுதும் பூத்து காய்த்துக் கொண்டிருக்கிறார்கள் எம் தமிழர்கள்!’’-அறிவுமதி பேசப் பேச, ஊரே அதிசயமாகப் பார்க்கிறது.

‘ஏ ராசா’ என ஒரு ஆத்தா கன்னம் தடவி நெட்டி முறிக்கிறார். அந்திசாய, அங்கிருந்து கிளம்புகிறோம். எல்லோரிடமும் விடை பெற்று ஊர் எல்லையை அடைய, அங்குள்ள வெட்டவெளியில் உள்ள பிரமாண்ட சிலைகளுக்கு நடுவே ஒரு கூட்டம் கூடி யிருக்கிறது. அவர்களோடு சேர்ந்துகொள்கிறார் அறிவுமதி.

‘‘இங்கே சிலையா நிக்கறதும் வீரனார்தான். அங்கே இருக்கறது மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களோட வீரனார். இது தாழ்த்தப்பட்டவங்களோடது. பாருங்க... சாதி, வீரனாரையும் விட்டு வைக்கலை.

என்னோட சின்ன வயசுல ஆத்துல வெள்ளம் வந்தா ஊரே தீவாக மாறிவிடும். உலகத்தோடு ஊரின் உறவே துண்டிக்கப்பட்டுவிடும். வெள்ளம் வடிஞ்சதும் இளைஞர்களெல்லாம் சேர்ந்து, துவைக்கிற கல்லை தேடியெடுத்து படித்துறையில கொண்டுபோய் வைப்பாங்க. நாங்களெல்லாம் வீரனாரைத் தேடுவோம். தலை தனியா, கை காலெல்லாம் தனித் தனியா மணல்ல புதைஞ்சு கிடக்கிற எங்க பாட்டனாரைத் தேடி எடுத்து ஒண்ணா சேர்த்து வைப்போம்.

இப்பவும் சாதீயம்ங்கற வெள்ளம் அடிச்சு, வீரனார் பிரிந்துதான் கிடக்கிறார். இந்த இரண்டு வீரனாரையும் ஒன்றாகச் சேர்த்து வைப்பது தான் என் கனவும் லட்சியமும். என் லட்சியம் நிச்சயம் நிறை வேறும்!’’


தன் பாட்டனாரைப் பார்த்தபடி அத்தனை உறுதியாக அறிவுமதி சொல்ல, கூடி நிற்கும் கூட்டத்தினரின் கண்களில் சின்னதாய் தீப ஒளி!

ராஜுமுருகன்
படங்கள்: கே.கார்த்திகேயன்

நன்றி
ஆன்ந்த விகடன்

கருத்துகள் இல்லை: